கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். அந்த கல்யாணம் எல்லோருக்கும் எளிதில் நடைபெற்று விடாது. ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போனாலே ஏதாவது ஒரு தோஷத்தை சொல்லி திருமணம் கைகூடி வருவது தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும்.

திருமண தடை நீங்க என்ன பரிகாரம் செய்வது என்று யோசித்து கோவில் கோவிலாக ஏறி இறங்குவார்கள். சுயம்வர பார்வதி தேவியை மனதார நினைத்து மூலமந்திரம் சொல்லி வணங்கினால் திருமண தடை நீங்குவதோடு பெண்களின் மனதிற்கு பிடித்த நபர் கணவனாக வருவார்.திருமணம் மட்டுமின்றி, தம்பதி ஒற்றுமை, விவாகரத்து ஆகாமல் தடுக்கவும், குழந்தை பாக்கியதிற்கும் ஸ்வயம்வர பார்வதி மூல மந்திரம் சிறப்பான பலன் அளிக்கும். பௌர்ணமி நாட்களில் நடைபெறும் சுயம்வர பார்வதி தேவி யாகத்தில் பங்கேற்கலாம்.
அது தவிர சிவ ஆலயங்களிலும் விஷ்ணு ஆலயங்களிலும் இறைவனுக்கும் இறைவிக்கும் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தை கண்ணார கண்டு தரிசனம் செய்தாலே போதும் திருக்கல்யாணம் கூடி வரும்.கல்யாண வரம் தரும் மந்திரம்.ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி.யோகேஸ்வரி யோக பயங்கரி.ஸகல ஸ்தாவர ஜங்கமஷ்ய.
முக ஹ்ருதயம் மம வசம்.ஆகர்ஷ ஆகர்ஷாய நமஹ:
என்ற சுயம்வர பார்வதி மந்திரத்தை துர்வாச முனிவர் அருளியுள்ளார். பரமசிவனை திருமணம் செய்ய பார்வதி அருளிய மந்திரம். காதலிப்பவர்களுக்கும் திருமணம் நடைபெறுவதில் தடைகள் இருந்தால் இந்த மந்திரத்தை சொல்லி வழிபட காதல் கைகூடி திருமணத்தில் முடியும்.

திருமணம் நடைபெற்று சில மாதங்களிலேயே சிலருக்கு பிரிவு வரும். அதுவும் ஏதாவது ஒரு தோஷத்தினால்தான் வரும். திருமணமான சில நாட்களில் பிரிந்த தம்பதிகள் கண்ணீர் விட்டு கதறிக்கொண்டிருக்காமல் சுயம்வர பார்வதி மந்திரத்தை தினசரியும் படிக்கலாம் கணவன் மனைவி இடையே மனதளவில் ஒற்றுமை அதிகரிக்கும். பிரிவினை நீங்கி நெருக்கம் அதிகமாகும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஆண் பெண் கிரகங்களில் உள்ள தோஷங்கள் திருமண தடையை மட்டுமல்லாது திருமணத்திற்கு பின்னரும் கணவன் மனைவி இணைய விடாமல் தடுக்கும். தடை நீங்கி இனிமையான இல்லறம் அமைய ஒரு முக்கியமான ஜோதிட பரிகாரம் உள்ளது. இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்வதன் மூலம் தசாபுத்தி சரியில்லாமல் இருந்தால் கூட தடைகள் நீங்கி திருமணம் கை கூடி வரும் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைதான் இந்த பரிகாரம் செய்ய ஏற்ற தினம். வீட்டில் விளக்கேற்றி வைத்து ஐந்து வெற்றிலை ஐந்து மஞ்சள் துண்டு ஐந்து பாக்கு வணங்கவேண்டும். சுயம்வர பார்வதி மந்திரம் சொல்லி வணங்கி ராகு காலத்தில் அருகில் இருக்கும் சுமங்கலி பெண்களுக்கு தானமாக தர வேண்டும். சீக்கிரம் திருமணம் நடைபெற வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக்கொள்ளலாம். இதனால் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும்.

இப்போது கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் துர்க்கை அம்மன் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது வீட்டிலேயே இந்த பரிகார பூஜையை செய்யலாம். கோவில்கள் திறந்த பின்னர் வெள்ளி, செவ்வாய் ராகு காலத்தில் துர்க்கை அம்மன் முன்னால் வெற்றிலை மஞ்சள் பரிகாரம் செய்து வழிபடலாம். மனம் போல மாங்கல்யம் கிடைக்க துர்க்கை அம்மனும், பார்வதி அன்னையும் அருள்புரிவார்கள்.