உறவினர் வீட்டில் பிள்ளைக்கு பாலூட்டுவதாக தெரிவித்து வீட்டினுள் சென்று சூட்சுமமாக தாலி கொடியை களவாடி சென்ற பெண் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பெரிய நீலாவணை பகுதியில் இடம்பெற்றுள்ளது.அம்பாறை – பெரிய நீலாவணை பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் இருந்த 8 பவுண் பெறுமதி உடைய தாலிக்கொடி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை (25) முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்திருந்தனர்.இதன் போது குறித்த வீட்டில் கடந்த வியாழக்கிழமை (16) அன்று சம்பவம் இடம்பெற்ற நிலையில் தாலிக்கொடி காணாமல் சென்றிருந்ததை வீட்டினை அவதானித்துள்ளனர்.
இதனை அடுத்து வீட்டில் வந்து செல்கின்ற நபர்கள் தொடர்பில் ஆராய்ந்த பொலிஸார் இத்திருட்டு சம்பவத்தில் ஒரு குடும்பமே பின்னணியில் செயற்பட்டுள்ளதை அறிந்தனர்.தொடர்ந்து சம்பவம் தொடர்பில் முதலில் குறித்த குடும்பத்தின் உறவு முறையிலான 40 வயதுடைய பெண் சந்தேக நபரை பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர்.
சம்பவ தினமன்று குறித்த வீட்டிற்கு அடிக்கடி வந்தசெல்லும் சந்தேக நபர் தனது கைக்குழந்தைக்கு பாலூட்டுவதற்கு வெளிநபர்கள் இருப்பதனால் சங்கடமாக இருப்பதாக வீட்டு உரிமையாளரான தனது உறவினர்களிடம் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய வீட்டு உரிமையாளர் குழந்தையை வீட்டினுள் எடுத்து சென்று பாலூட்டுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதன்போதே சந்தேக நபரான பெண் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 8 பவுண் தாலிக்கொடியினை களவாடி சென்று விட்டார்.சமபவத்தில் 40 வயதுடைய பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) அன்று கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் தாய் தம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தந்தை தொடர்ந்தும் தலைமறைவாகி இருந்து வருகின்றார். இது போன்ற திருட்டில் கிடைக்கின்ற தங்க ஆபரணங்களை தம்பி தனது தனிப்பட்ட தேவைக்காக விற்பனை செய்து வருவது பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

அதேவேளை நகை திருட்டில் ஈடுபட்ட குறித்த சந்தேக நபரான பெண்ணிடம் நகைகளை பெற்று விற்பனை செய்த சந்தேக நபரும் கைதாகியுள்ளார். திருடப்பட்ட தாலிக்கொடி உருக்கிய நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.